பாகிஸ்தானின் இம்ரான்கான் தலைமையிலான அமைச்சரவை, பாலியல் குற்றவாளிகளுக்கு `கட்டாய ஆண்மை நீக்கம்' செய்து தண்டனையளிப்பதற்கான புதிய அவசர சட்டம் ஒன்றை முன் வைத்துள்ளது. இதற்கு அந்நாட்டு அதிபர் ஆரிஃப் ஆல்வி ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம், லாகூரை நோக்கி தன் குழந்தைகளுடன் காரில் சென்றுகொண்டிருந்த பெண்மணி, கார் பழுதாகி வழியில் நின்றபோது பின்னால் வந்த கும்பல் ஒன்றால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த பாகிஸ்தானும் கொந்தளித்து எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டி பல்வேறு போராட்டங்கள் நடந்த நிலையில், பாகிஸ்தானின் இம்ரான்கான் தலைமையிலான அமைச்சரவை, பாலியல் குற்றவாளிகளுக்கு `கட்டாய ஆண்மை நீக்கம்' செய்து தண்டனையளிப்பதற்கான புதிய அவசர சட்டம் ஒன்றை முன் வைத்துள்ளது. இதற்கு அந்நாட்டு அதிபர் ஆரிஃப் ஆல்வி ஒப்புதல் அளித்துள்ளார். 120 நாள்களுக்குப் பிறகு, இச்சட்டம் அங்குள்ள நாடாளுமன்றத்தால் நிரந்தர சட்டமாக அங்கீகரிக்கப்பட உள்ளது.
இந்தப் புதிய சட்டம் இப்பிரச்னைக்கு உகந்த தீர்வாக இருக்குமா, தண்டனைகள் கடுமையாவதால் குற்றங்கள் குறையுமா என்றெல்லாம் பல்வேறு விவாதங்கள் நடந்து வரும் நிலையில், ``இந்தச் சட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கையை நிச்சயமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். வழக்குகளை துரிதப்படுத்தி விரைவாகத் தீர்ப்பு வழங்குவதற்காக சிறப்பு நீதிமன்றங்களையும் ஏற்படுத்த இருக்கிறோம்” என்று பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.
உண்மையில், தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறைந்துவிடும் என்பது நடைமுறையில் வெறும் நம்பிக்கையாக மட்டுமே இருந்து வருகிறது. பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை தெற்கு ஆசியாவிலேயே முதலாவதாக நடைமுறைப்படுத்திய நாடு பாகிஸ்தான்தான். அந்நாட்டின் ராணுவ தளபதியாகவும், ஆறாவது அதிபராகவும் விளங்கிய ஜியா உல் ஹக், முறை தவறிய பாலுறவு மற்றும் வல்லுறவில் ஈடுபடும் குற்றவாளிகளை பொதுவில் நிறுத்தி கல்லால் அடித்துக் கொல்லும் முறையை 1979-ம் ஆண்டிலேயே சட்டமாக்கியிருக்கிறார்.
அதன்பின், 2006-ம் ஆண்டு இந்தச் சட்டத்தை திருத்தியமைத்து, பெண்களை மட்டுமன்றி 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவோருக்கும் மரண தண்டனை என்று விரிவாக்கினர். ஆனாலும், அதன் பின்னர் வந்த 14 ஆண்டுகளில் பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் குழந்தைகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்திருப்பதாகத்தான் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
உலகளவில் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச தண்டணையான மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை எனப்படும் 25 ஆண்டுக்கால சிறைத்தண்டனையை விதித்த பின்னரும், குற்றங்கள் கொஞ்சமும் குறையாமல் ஆண்டுக்கு ஆண்டு சீராக அதிகரித்து வருகையில், ஆட்சியில் இருப்பவர்கள் இன்னமும் தண்டனைகளை மட்டுமே தீர்வாக நம்பியிருப்பது வருத்தத்துக்குரியது.
இந்தக் கட்டாய ஆண்மை நீக்கம் என்பது என்ன, அது உண்மையாகவே குற்றவாளிகளுக்குத் தண்டணையாக இருக்குமா என்பதும் விவாதத்துக்குரிய விஷயமாக இருக்கிறது. ஆண்மை நீக்கம் என்பது அறுவைசிகிச்சை அல்லது மருந்துகள் உட்செலுத்துவது என இரு வழிகளில் செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை முறையில் ஆண்களின் விதைப்பைகளை அறுவை செய்து முழுமையாக எடுத்து விடுவார்கள். வலி மிகுந்த இந்த முறையில், ஆண்களால் நிரந்தரமாகப் பாலுறவில் ஈடுபட முடியாத நிலை உருவாகும். ஆனால், பாலியல் குற்றவாளிகளுக்குத் தண்டனையாகச் செய்யப்படுவது `Chemical Castration' எனப்படும், மருந்துகள் மூலம் அவர்களின் பாலுணர்ச்சிகளை மழுங்கடிக்கும் முறையாகும். இதை ஒரே ஓர் ஊசி போடுவதன் மூலம் செய்து விட முடியாது. குறைந்தது இரண்டு வருடங்களுக்காவது தொடர்ச்சியாக அவர்கள் உடலில் MPA (medroxyprogesterone acetate) என்ற மருந்தை ஊசி அல்லது மாத்திரை வழியாக செலுத்திக் கொண்டிருப்பார்கள்.
இது ஆண்களின் முக்கிய பாலுணர்வு ஹார்மோனான டெஸ்டோஸ்டீரானின் சுரப்பை மெல்ல மெல்லக் குறைத்து அவர்களை ஆண்மையற்றவர்களாக மாற்றுகிறது. இம்மருந்துகளால் தீவிர மன அழுத்தம், ஈரல் கோளாறுகள், எலும்பு அடர்த்தி குறைவது, முடி உதிர்வது போன்ற பக்க விளைவுகள் நிறைய இருந்தாலும் இதன் வீரியம் 4-5 ஆண்டுகள் மட்டுமே உடலில் இருக்கும் என்பதால் இது நிரந்தரமானதல்ல. மேலும், பாலுணர்வை மட்டுமே மந்தப்படுத்தும் இம்மருந்து, 8 மாதக் குழந்தையிடம்கூட மனிதத்தன்மையின்றி நடந்து கொள்ளும் மிருக உணர்வை எவ்வகையிலும் குறைப்பதில்லை. அதனால், மரண தண்டனைக்கும் ஆயுள் தண்டனைக்குமே குறையாத குற்றங்கள், இந்த ஆண்மை நீக்க தண்டனையால் குறைந்து விடுமாவெனத் தெரியவில்லை.
கருத்துரையிடுக